Wednesday, 5th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மீண்டும் 1,000 ரூபாய் யாருக்கெல்லாம் தெரியுமா?

ஏப்ரல் 21, 2020 12:35

சென்னை: நலவாரியங்கள் மூலம் மீண்டும் 1,000 ரூபாய் வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பிக்கப்பட்டு அதற்காக 86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

கொரோனா ஊரடங்கால் பல தரப்பினரும் பாதிக்கப்பட்டு தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். தினக் கூலிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், தொழிற்சாலைகளுக்கு செல்வோர், எனப் பலரும் சுமார் ஒரு மாத காலமாக வருமானமிழந்து அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

ரேஷன் அட்டை தாரர்களுக்கு இலவச அரிசி, உணவுப் பொருள்கள், 1,000 ரூபாய் என பல நிவாரண நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டாலும் போதுமானதாக இல்லை என்பதே மக்கள் மத்தியிலிருந்து வரும் குரலாய் இருக்கிறது. மேலும் நலவாரியங்கள் சார்பாகவும் 1,000 ரூபாய் வழங்கப்பட்டது. 

ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அதன்பின் மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 20ம் தேதிக்குப் பிறகு ஊரகப் பகுதிகளில் ஊரடங்கில் தளர்வு கொண்டுவர மத்திய அரசு கூறியிருந்தது. ஆனால், தமிழ்நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் தமிழக அரசு ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்த முடியாது என அறிவித்தது.

இதனால் வாழ்வாதாரங்களை இழந்து நிற்கும் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் மேலும் 14 நலவாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு 1.000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள், பட்டாசு தொழிலாளர்கள், சிறு வணிகர்கள், பழங்குடியினர், நாட்டார் கலைஞர்கள், பூசாரிகள், தூய்மைப் பணியாளர்கள், நரிக்குறவர்கள், புத்திரை வண்ணார்கள், திருநங்கைகள், சினிமா தொழிலாளர்கள் உள்ளிட்ட 14 நலவாரியங்களில் பதிவு செய்துள்ள 8 லட்சத்து, 60 ஆயிரத்து, 536 பேருக்கு தலா 1,000 ரூபாய் நிதிவழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்காக 86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் ரேஷன் அட்டை இல்லாதவர்கள், நல வாரியங்களில் பதிவு செய்யாதோர் பெரியளவில் உள்ளதால் பெரும்பலான மக்கள் இந்த நிதியுதவியை பெறமுடியாத நிலையில் உள்ளனர். பேரிடர் கால நிவாரணமாக பகுதி வாரியாக வீடு, வீடாக வழங்கவேண்டும்  நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்