Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா நோயாளிகளை தவறுதலாக அனுப்பி வைத்த விழுப்புரம் மருத்துவமனை

ஏப்ரல் 09, 2020 05:53

விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவமனையில் கொரோனா உறுதி செய்யப்பட்ட டில்லி வாலிபர் உட்பட 4 பேர், பரிசோதனை முடிவுகள் வரும் முன்னரே, தவறுதலாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தவறை உணர்ந்ததும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனால், 3 பேர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மாயமான டில்லி வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மாயமான டில்லி நபர், ஓட்டல் மேனேஜ்மென்ட் முடித்துவிட்டு வேலை தேடி கடந்த டிசம்பர் மாதம் புதுச்சேரி வந்தார். அங்கு கார் திருட்டு வழக்கில், காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து வந்ததும், கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இரு வழக்குகளிலும் மூன்று மாத சிறைதண்டனை முடிந்து கடந்த 16ல் விடுதலையானார். அதன் பின் ஓரிரு நாள் புதுச்சேரி கடற்கரை பகுதியில் சுற்றி திரிந்தார். கடந்த 21 ல் விழுப்புரம் பஸ் நிலையம் சென்ற அவரை, வட மாநில டிரைவர்களுடன் ஒரு வாரம் தங்கியுள்ளார். வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் பட்டியலில் இருந்தால், அவர் கடந்த 6 ல் விழுப்புரம் ' கொரோனா' சிறப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டார். டில்லி வாலிபர் உட்பட 26 பேருக்கு கொரோனா இல்லை என ஏப்.,7 தகவல் வந்தது. இதனையடுத்து அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில்,  (ஏப்., 8) மதியம் அவர்களின் மருத்துவ பரிசோதனை வந்தது. அதில் வீட்டிற்கு அனுப்பப்பட்ட 26 பேரில், டில்லி வாலிபர் உட்பட 4 பேருக்கு கொரோனா உள்ளது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை மருத்துவமனையில் அதிகாரிகள் அனுமதித்தனர். டில்லி வாலிபர் எங்கிருக்கிறார் என்ற தகவல் இல்லை. அவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு 04146334265 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரை கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக சுகாதார செயலர் பீலா ராஜேஷ் கூறுகையில், விழுப்புரத்தில் கொரோனா பாதித்த 4 பேரும் அரசின் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களை கண்காணித்து வருகிறோம். கொரோனா நோயாளிகள், தனிமைவார்டில் அனுமதிக்கப்படுவதில் தவறு நடக்கக்கூடாது என தெரிவித்தார்.

பெயர் வெளியிட விரும்பாத மற்றொரு அதிகாரி ஒருவர் கூறுகையில், விழுப்புரத்தில் தனிமை முகாமில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் தொடர்பு கொண்ட நபர்கள் அரசின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா உறுதியானவுடன் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக விழுப்புரம் எஸ்.பி., ஜெயக்குமார் கூறுகையில், கொரோனா நோயாளிகள் தவறுதலாக விடுவிக்கப்பட்டுவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரவித்தது. அதில் 3 பேரை நாங்கள் கண்டறிந்துவிட்டோம். டில்லியை சேர்ந்தவரை தேடி வருகிறோம். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. இந்த விவகாரத்தில் மருத்துவமனை சார்பில் தவறு நடந்துள்ளது என்றார்.

புதுச்சேரி போலீசாரும், தங்களது வாட்ஸ் ஆப் குரூப்பில், கொரோனா பாதித்த டில்லி நபர் தப்பி சென்றது குறித்து செய்தி வெளியிட்டு அவரை தேடி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்