Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆம் ஆத்மி டெல்லியில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: கருத்துக் கணிப்பில் தகவல்

பிப்ரவரி 04, 2020 11:46

புதுடெல்லி: டெல்லி மாநில சட்ட சபைக்கு வருகிற 8-ந்தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுவதற்கு இன்னும் 2 தினங்களே இருப்பதால் டெல்லியில் உச்சக்கட்ட அனல்பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது.

டெல்லி சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி, பாரதிய ஜனதா, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே மும் முனைப்போட்டி நிலவுகிறது. கடந்த 2015-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது மும் முனைப்போட்டி ஏற்பட்டது. அப்போது மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 67 இடங்களில் ஆம்ஆத்மி வெற்றி பெற்று இமாலய சாதனை படைத்தது.

பாரதிய ஜனதா கட்சிக்கு 2 இடங்கள் கிடைத்தன. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டது. இந்த தடவை தேர்தலிலும் அதேபோன்று இமாலய வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆம் ஆத்மி தலைவர்களின் தேர்தல் பிரசாரம், தேர்தல் அறிக்கை மற்றும் வாக்குறுதிகள் டெல்லி மக்களை மிகவும் கவர்ந்துள்ளன. எனவே இந்த தடவையும் டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இருப்பதாக மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கருத்துக் கணிப்பு முடிவுகளும் அதையே பிரதிபலிக்கின்றன.

‘டைம்ஸ் நவ்’ தொலைக் காட்சி சார்பில் சமீபத்தில் டெல்லியில் 70 தொகுதிகளிலும் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதிலும் டெல்லி தேர்தலில் மீண்டும் ஆம் ஆத்மி அதிக இடங்களில் வெற்றி பெற்று மிக, மிக எளிதாக ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மிக்கு மொத்தம் உள்ள 70 இடங்களில் 54 முதல் 60 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது. 52 சதவீதம் மக்கள் ஆம் ஆத்மிக்கு வாக்களிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. என்றாலும் கடந்த 2015-ம் ஆண்டு கிடைத்த வாக்கு சதவீதத்துடன் ஒப்பிடுகையில் ஆம் ஆத்மிக்கு 2.5 சதவீதம் வாக்குகள் குறையும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்