Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கொல்கத்தா: மேற்கு வங்க அமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான பார்த்தா சாட்டர்ஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாட்டின் மிகப்பெரிய நிதி மோசடி வழக்குகளில் சாரதா சிட் ஃபண்ட் நிதி நிறுவன மோசடி வழக்கும் ஒன்று. மேற்கு வங்கத்தில் பொதுமக்களிடம் பெற்ற பணம் ரூ.2,500 கோடி ஏமாற்றப்பட்டதில் ஆளும் திரிணாமுல் கட்சிக்கும் தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது.
மோசடியில் ஈடுபட்டவர்ளை கைது செய்ய மாநில அரசின் ஒத்துழைப்பு கிடைக்காத நிலையில் 2014ல் இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
சிபிஐ அதிகாரிகளின் நடவடிக்கைகள் மாநில அதிகாரிகளை தொடர்ந்து அவமதிப்பதாகக் கூறி மம்தா பானர்ஜி தர்ணாவில் ஈடுபட்டார். ஆனால் தொடர்ந்து திரிணாமுல் கட்சியைச் சேர்ந்தவர்களையும் முக்கிய அதிகாரிகளையும் சம்மன் அனுப்பி விசாரித்து வருகிறது.
இதுகுறித்து சிபிஐயின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது
மேற்கு வங்க அமைச்சரும் திரிணாமுல் பொதுச்செயலாளருமான பார்த்தா சாட்டர்ஜி சிபிஐ நகர அலுவலகத்தில் இன்று மதியம் விசாரணை அதிகாரிகள் முன்பாக ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சாரதா சிட்பண்ட் மோசடி தொடர்பாக எங்கள் விசாரணை அதிகாரிகள் அவரை விசாரிக்க உள்ளனர். அவருக்காகத்தான் நாங்கள் காத்துக்கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு சிபிஐயின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.
பார்த்தா சாட்டர்ஜியின் தொலைபேசி எண்ணுக்கு பல அழைப்புகள் மற்றும் தகவல்கள் அனுப்பியும் இதுவரை அவரிடமிருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை என்று கூறப்படுகிறது.