Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: ஆளுங்கட்சியை சேர்ந்த மதுரவாயல் பகுதியை சேர்ந்த மாஜி கவுன்சிலர் தனது மகனின் திருமண வரவேற்பிற்காக சென்னையின் முக்கிய சாலையை கட் அவுட்டுகளால் ஆக்கிரமித்து அராஜகப்படுத்தியுள்ளார் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சென்னை மதுரவாயல் 147 வது வட்டத்தின் முன்னாள் கவுன்சிலர் தேவதாஸ். இவர் தற்போதைய அதிமுக வட்டச்செயலாளராகவும் உள்ளார். இன்று (ஜூலை 15) இவரது மகனின் திருமணம், மதுரவாயிலில் உள்ள ஒரு மதச்சபை மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக, கோயம்பேடு தொடங்கி மதுரவாயல் வரையிலும், பூந்தமல்லி ஹைவே முழுவதிலும் அடிக்கு ஒரு கட் அவுட் மற்றும் பிளக்ஸ் பேனர்களை வைத்துள்ளார்.
இந்த திருமணத்திற்கு முதல்வரும், துணை முதல்வரும் அமைச்சர்களும் வருவதாக ஒவ்வொரு பிளக்ஸ் பேனர்களிலும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
பொது மக்களையும், வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள இந்த பேனர்கள் குறித்து போலீசாரிடம் கேட்டபோது, '' 100 கட் அவுட், பிளக்ஸ் பேனர்களுக்கு அவர்கள் சென்னை கார்ப்பரேஷனில் அனுமதி பெற்றுள்ளார்கள்,'' என்று நழுவினர்.
ஆனால், பூந்தமல்லி நெடுஞ்சாலை முழுவதிலும் 200 க்கும் அதிகமான கட் அவுட்டுகள் உள்ளன. சென்னை பெருநகர போக்குவரத்தே ஸ்தம்பிக்கும் அளவிற்கான இந்த பேனர் அதகளத்தின் மீது யார் நடவடிக்கை எடுப்பது என்று மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.