Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஸ்ரீநகர் :ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். இந்த ஆண்டு 46 நாட்கள் இந்த யாத்திரை நீடிக்கும்.
2017-ம் ஆண்டு ஜூலை மாதம் யாத்திரீகர்கள் சென்ற பேருந்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பேர் பலியாகினர், 12 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த, தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வருட அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு, பக்தர்களுக்கு அமைதியான மற்றும் பாதுகாப்பான யாத்திரையை உறுதி செய்ய, சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் உள்ள பாதுகாப்பு படையினருக்கு தீவிர எச்சரிக்கையுடன் இருக்ககும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், புனித யாத்திரையின் முதல் குழு ஜம்முவில் இருந்து வாகனங்களில் இன்று காலை புறப்பட்டு சென்றது. முதல் குழுவை காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்கின் ஆலோசகர் கே.கே.சர்மா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முதல் குழுவில் 2,200 பேர் செல்கின்றனர். இதில் 1,839 ஆண்கள், 333 பெண்கள் 17 குழந்தைகள், 45 சாதுக்கள், சன்னியாசினிகள் 93 வாகனங்களில் பயணம் செய்கின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த வாரம் ஜம்மு காஷ்மீர் வந்த உள்துறை மந்திரி அமித்ஷா, அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது