Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் இருந்து, லாரியில் நாமக்கல்லுக்கு, 9 டன் ரேசன் அரிசி கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையிலான போலீஸ் படையினர், நாமக்கல் அடுத்த வாழவந்தி பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த சரக்கு லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் 160 மூட்டைகைளில் 9,000 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த அரிசி வெளிமாவட்டத்தில் இருந்து நாமக்கல்லுக்கு கடத்தி வரப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அரிசி கடத்தலில் ஈடுபட்ட கடலூர் மாவட்டம் சாத்தக்குடலை பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் (52), விருத்தாச்சலம் தெற்கு பெரியார் நகரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (60) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும், ரேசன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன் படுத்தப்பட்ட லாரியையும் போலீசார் பறிமுதல் செய்து, ரேசன் அரிசி எங்கிருந்து கடத்தி வரப்பட்டது, அது எங்கு கொண்டு செல்லப் படுகிறது, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.