Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொல்லி மலையில் வல்வில் ஓரி விழா மாவட்ட ஆட்சியர் உமா தகவல்

ஜுலை 21, 2023 11:59

நாமக்கல்: கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா மற்றும் மலர்க்கண்காட்சி ஆகிய விழாக்கள் தமிழ்நாடு அரசின் சார்பில் மிகச்சிறப்பாக கொண்டாடுவதற்கான பணிகள் குறித்த முன்னேற்பாடு கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. 

மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா  தலைமை தாங்கினார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜேஸ் கண்ணன்  முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையேற்று அனைத்துத் துறை அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி பேசும் போது, 
கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி அவர்களை போற்றிடும் வகையில் ஆண்டுதோறும் ஆடித்திங்கள் 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்கள் தமிழக அரசின் சார்பில் வல்வில் ஓரி விழா கொல்லிமலையில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

அதேபோல் இந்த ஆண்டும் வருகின்ற ஆடித்திங்கள் 17 மற்றும் 18  (02.08.2023 புதன்கிழமை மற்றும் 03.08.2023 வியழாக்கிழமை) ஆகிய 2 நாட்கள் அரசின் சார்பில் வல்வில் ஓரி விழா கொல்லி மலையில் உள்ள வல்வில் ஓரி அரங்கில் மிகச்சிறப்பாக கொண்டாடப் படவுள்ளது.

தமிழக அரசின் சார்பில் கொண்டாடப்படவுள்ள வல்வில் ஓரி விழாவையொட்டி கொல்லிமலை வல்வில் ஓரி அரங்கில் காவல் துறை, வனத்துறை, ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்டம், கூட்டுறவுத் துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை, பட்டு வளர்ச்சித் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, சித்த மருத்துவத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, சமூகநலத் துறை, செய்தி-மக்கள் தொடர்புத் துறை, சுற்றுலாத் துறை, குழந்தை தொழிலாளர் நலத்துறை, கல்வித்துறை மற்றும் அனைவருக்கும் கல்வி திட்டம், ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட அரசுத்துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. 

இந்த ஆண்டு கொல்லிமலையில் தமிழக அரசின் சார்பில் கொண்டாடப்படவுள்ள வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா, மற்றும் மலர்க்கண்காட்சி விழாவினை பசுமை திருவிழாவாக மிகச்சிறப்பாக நடத்திட துறை அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை ஈடுபாட்டுடன் மேற்கொண்டு விழாவினை பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் பாராட்டும் வகையில் சிறப்பாக நடத்திட வேண்டும்.

பின்னர் அரசு அலுவலர்கள் தங்கள் துறையின் சார்பில் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒரு முறை பயன்படுத்தபடும் பிளாஸ்டிக் பொருட்களை கட்டாயம் பயன்படுத்த கூடாது. மலைவாழ் மக்கள் கண்டுகளிக்கும் வகையில் கலை பண்பாட்டு துறை மற்றும் சுற்றுலாத் துறையின் சார்பில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும், பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் வில்வித்தை சங்கத்தின் சார்பில் வில்வித்தை விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.

மேலும் மாற்றுத்திறனாளிகள் துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. அரசுத்துறைகளின் மூலம் மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து துறை சார்பில் பல்துறை பணிவிளக்கக் கண்காட்சி நடத்தப்படவுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா பேசினார். 

இக்கூட்டத்தில் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சிவக்குமார், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் செல்வகுமரன், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் சரவணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மாதவன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தே.ராம்குமார், மாவட்ட சுற்றுலா அலுவலர் மு.அபராஜிதன், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் பிரபாகரன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்