Monday, 3rd June 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சங்கரன்கோவில்: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியின் தமிழ் துறையில் கடந்த ஏழு வருடங்களாக தற்காலிக உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி, தற்போது பாளையங்கோட்டை சாராள் டக்கர் கல்லூரியில் நிரந்தர தமிழ் உதவிப் பேராசிரியராக பணி நியமனம் பெற்றுள்ள பேராசிரியை முனைவர் மேனகாவுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் அப்துல் காதிர் தலைமையில் பாராட்டு விழா நடந்தது.
நிகழ்ச்சியில் தலைமையுரையாற்றிய கல்லூரி முதல்வர் முனைவர் அப்துல் காதிர், பேராசிரியர் மேனகா தமிழ் துறையில் ஆற்றிய பணிகள் குறித்தும், மாணவ-மாணவிகளின் தமிழ் திறனை வளர்க்கும் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட வாகை இலக்கிய வட்டத்தின் மூலம் கவிதை, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு அளித்த பயிற்சியினையும், நாட்டு நலப் பணித்திட்ட அலுவலராக பணியாற்றி கல்லூரியில் நடந்த நாட்டு நலப் பணித்திட்ட நிகழ்ச்சிகளிலும், கடந்த ஏப்ரல் மாதம் வென்றிலிங்கபுரம் கிராமத்தில் நடந்த ஏழு நாள் சிறப்பு முகாமில் அவர்கள் ஆற்றிய பணிகள் குறித்தும் நினைவு கூர்ந்து பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
கல்லூரியின் தமிழ் துறை தலைவர் பேராசிரியர் அருள் மனோகரி மற்றும் பேராசிரியர்கள் கணபதி, குருநாதன், செந்தில்குமார், உதயசங்கர் சுரேஷ்குமார் உள்ளிட்ட அனைத்துப் பேராசிரியர்களும், உடற்கல்வி இயக்குனர் முனைவர் கணேசனும் வாழ்த்திப் பேசினர். இறுதியில் முனைவர் மேனகா ஏற்புரை ஆற்றி நன்றி தெரிவித்தார்.