Monday, 3rd June 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் ரத்த பிளாஸ்மாவுக்கு பதில் சாத்துக்குடி பழச்சாறை டிரிப்ஸ் மூலம் கொடுத்த சம்பவத்தில் டெங்கு நோயாளி உயிரிழந்தார். உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தை சேர்ந்த பிரதீப் பாண்டே என்ற நபர் டெங்கு பாதிப்பால் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மிகவும் மோசமாக இருந்த நிலையில் அவருக்கு இரத்த அணுக்களை அதிகரிக்க 'டிரிப்ஸ்' மூலம் ரத்த பிளாஸ்மா ஏற்றப்பட்டது.
3 ரத்த பிளாஸ்மா ஏற்றப்பட்ட நிலையில் உடல்நிலை மிகவும் மோசமடைந்த நோயாளி பிரதீப் பாண்டே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், நோயாளிக்கு 'டிரிப்ஸ்' மூலம் ஏற்றப்பட்டது ரத்த பிளாஸ்மா அல்ல என்பதும் அது சாத்துக்குடி பழச்சாறு என்பதும் தெரியவந்துள்ளது. பிளாஸ்மாவுக்கு பதில் சாத்துக்குடி பழச்சாறு பாக்கெட்டில் அடைக்கப்பட்டுள்ளது. அதை 'டிரிப்ஸ்' மூலம் நோயாளிக்கு நரம்பு வழியே ஏற்றியுள்ளனர். இதில், உடல்நிலை மோசமடைந்த நோயாளி பிரதீப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். நோயாளிக்கு பிளாஸ்மாவுக்கு பதில் சாத்துக்குடி ஜூஸ் ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக அந்த மருத்துவமனை நிர்வாகி கூறுகையில், நோயாளியின் உடலில் ரத்த அணுக்களின் அளவு 17 ஆயிரமாக குறைந்தது. இதனால், ரத்த பிளாஸ்மாக்களை ஏற்பாடு செய்யுமாறு நோயாளியின் உறவினர்களிடம் கூறினோம். அவர்கள் எஸ்ஆர்என் மருத்துவமனையில் இருந்து 5 யூனிட் ரத்த பிளாஸ்மாவை கொண்டு வந்தனர். அதில், 3-ஐ நோயாளியின் உடலில் ஏற்றினோம். அப்போது, அவரது உடல்நிலை மோசமடைந்தது.
இதனால், பிளாஸ்மாவை செலுத்தும் பணியை உடனடியாக நிறுத்திவிட்டோம்' என்றார். பிளாஸ்மாவுக்கு பதில் சாத்துக்குடி ஜூஸ் செலுத்தியதில் நோயாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள அதிகாரிகள் மருத்துவமனைக்கு சீல் வைத்ததுடன் அங்குள்ள மருந்துகள், பிளாஸ்மா உள்ளிட்டவற்றை சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பிளாஸ்மாவுக்கு பதில் சாத்துக்குடி பழச்சாறு செலுத்தியதில் நோயாளி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.