Sunday, 16th June 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: தமிழக அரசு ஆன்மிக அரசு தான் எனவும், அரசு அவர்களின் கொள்கையை கவனிக்கிறது. எங்களது கொள்கையை நாங்கள் கவனித்து வருகிறோம் என தருமபுரம் ஆதீனம் கூறியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள ஆதீனங்களுடன், தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தருமபுரம் ஆதீனம், காஞ்சிபுரம் ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம், திருவண்ணாமலை ஆதீனம், குன்றக்குடி அடிகளார், சூரியநாராயண ஆதீனம் மற்றும் அழகிய மணவாள ஜூயர், சிவக்கிரக யோகிகள் மட ஆதீனம் உட்பட 11 ஆதீனங்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதன் பிறகு தருமபுரம் ஆதீனம் நிருபர்களிடம் கூறியதாவது: திருமடங்களுக்கு பட்டா நிலங்கள் கொடுப்பது குறித்து கோரிக்கை வைக்கப்பட்டது. திருக்குவளையில் கிடைத்த மரகத லிங்கத்தை மீண்டும் கோயிலில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதீனங்களுக்கு என்ற தனியாக சட்ட திட்டங்கள் உள்ளன. தமிழக அரசும் ஆன்மிக அரசு தான். அரசு அவர்களின் கொள்கையை கவனித்து வருகின்றனர். நாங்கள் எங்களது கொள்கையை பார்க்கிறோம். எங்களது கொள்கையில் அரசு தலையிடவில்லை என்பதை பாராட்டுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.