Wednesday, 5th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரவுடிகளின் அட்டகாசம் தமிழகத்தில் கொடி கட்டி பறக்கிறது: ஓபிஎஸ் குற்றச்சாட்டு

ஏப்ரல் 05, 2022 11:52

சென்னை: காவல்துறையினரை கண்டு ரவுடிகள் அஞ்சிய காலம் மாறி, ரவுடிகளை கண்டு காவல் துறை அஞ்சும் நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“நல்ல விளக்குக்கு வெளிச்சம் எப்படியோ, நல்ல வயலுக்கு விளைச்சல் எப்படியோ, அப்படித்தான் நல்ல ஆட்சியில் மக்களுக்கு நிம்மதி வேண்டும்.” என்று நல்ல ஆட்சிக்கு விளக்கம் தந்திருக்கிறார் அண்ணா. அண்ணாவின் கூற்றிற்கு மாறான நிலைமை தற்போது தமிழ்நாட்டில் நிலவுகிறது.

‘அமைதி, வளம், வளர்ச்சி’ என்ற சூழ்நிலை மாறி, ‘அமைதியின்மை, வளமின்மை, வளர்ச்சியின்மை’ என்ற சூழல் கடந்த பதினோறு மாதங்களாக நிலவி வருகிறது. காவல்துறையினரை கண்டு ரவுடிகள் அஞ்சிய காலம் மாறி, ரவுடிகளை கண்டு காவல் துறை அஞ்சும் நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது.

தி.மு.க. ஆட்சி தமிழ்நாட்டில் பொறுப்பேற்றதில் இருந்து பாலியல் வன்கொடுமைகளும், கொலைகளும், கொள்ளைகளும் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. அரசு அதிகாரிகளும், சிறு தொழிலதிபர்களும், வியாபாரிகளும், இன்னும் சொல்லப்போனால், காவல்துறையினரே மிரட்டப்படும் நிகழ்வுகளும் ஆங்காங்கே அன்றாடம் நடைபெற்று வருகின்றன. ரவுடிகளின் அட்டகாசம் தமிழ்நாட்டில் கொடி கட்டி பறக்கிறது.

மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும் சென்னை நகரின் பிரதானப் பகுதியான பாரிமுனையில் பட்டப்பகலில் தி.மு.க. பிரமுகர் சவுந்தரராஜனை மர்மக் கும்பல் பயங்கரமான ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளது. இது சட்டம் ஒழுங்கு சீரழிவிற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு.

தற்போதைய தி.மு.க. ஆட்சியில் அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், குறு, சிறு தொழிலதிபர்கள், வியாபாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், இன்னும் சொல்லப்போனால் பாதுகாப்பினை வழங்கக் கூடிய காவல் துறையினர் என அனைத்துத் தரப்பினரும் ஓர் அச்ச உணர்வுடனேயே இருக்கின்றனர். மொத்தத்தில் பாதுகாப்பில்லாத சூழ்நிலை தமிழ் நாட்டில் நிலவுகிறது. இதற்குக் காரணம் சமூக விரோதிகளின் பயமின்மை.

பொது அமைதி இல்லை என்றால் தொழில் வளம் இருக்காது, தொழில் வளம் இல்லை என்றால் பொருளாதார வளர்ச்சி இருக்காது, பொருளாதார வளர்ச்சி இல்லையென்றால் வேலைவாய்ப்புகள் இருக்காது. வேலைவாய்ப்புகள் இல்லையென்றால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும். இது ஒரு கெடுசூழல். எனவே பொது அமைதியை உருவாக்க வேண்டிய கடமை, சட்டம் ஒழுங்கை சீராக்க வேண்டிய பொறுப்பு தமிழ் நாடு அரசிற்கு, முதல்- அமைச்சருக்கு நிச்சயம் உண்டு.

சுகாதாரம், செல்வ வளம், விளைபொருளின் வளம், இன்ப வாழ்வு, நல்ல பாதுகாப்பு ஆகிய ஐந்தும் நாட்டிற்கு அழகு என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கிணங்க ரவுடிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கி, அமைதியை நிலை நாட்டி, அதன்மூலம் தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்