Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட நிலையில், மேல்முறையீடு செய்ய பரிந்துரைக்கப்படும் என அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வன்னியர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, முறையான கணக்கெடுப்பு விவரங்கள் இல்லாமல் இட ஒதுக்கீடு எப்படி தர முடியும்? சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா? என பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனால் வன்னியர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீத இடஒதுக்கீட்டை பெற முடியாது. இந்த வருடம் கல்வியில் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை என்னவாகும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக கூறிய பா.ம.க. கட்சியின் வழக்கறிஞர்கள் பாலு, தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
மேல்முறையீடு குறித்து தமிழக அரசு வழக்கறிஞரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, மேல்முறையீடு செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்றார்.
இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதுகுறித்து உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.