Tuesday, 4th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னையில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

ஜுலை 31, 2021 03:08

சென்னை: கொரோனா பெருந்தொற்றின் 2-வது அலையில் ஏராளமானோர் பாதிக்கப்பட்ட நிலையில் கொரோனா 3-வது அலை இன்னும் 3 மாதத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் கொரோனா பெருந்தொற்றை தவிர்க்கும் நோக்கில் பொதுமக்களை விழிப்புணர்வுடன் இருக்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது.

இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதையொட்டி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரசாரத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார்.

கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தையும் அவர் வெளியிட்டார். அங்கு கொரோனா 2-வது அலையில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டு இருந்தது. இதையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்பார்வையிட்டார். கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தில் எடுக்கப்பட்ட உறுதிமொழிகள் வருமாறு:-

* பொது இடங்களுக்கு செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிவேன்.

* மற்றவர்களிடம் இருந்து குறைந்தபட்சம் 6 அடி இடைவெளியை கடைப்பிடிப்பேன்.

* சோப்பும், தண்ணீரும் கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்வேன்.

* நான் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வதோடு மற்றவர்களையும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள ஊக்கப்படுத்துவேன்.

* இந்த உயிர்கொல்லி வைரஸ் பரவுவதை தடுக்க நான் அரசின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் கடைப்பிடிப்பேன்.

* மற்றவர்களையும் கொரோனாவிற்கு பொருத்தமான வழிகாட்டு நெறி முறைகளை கடைப்பிடிக்க வலியுறுத்துவேன்.

* கொரோனா 3-ம் அலையினை தடுக்க எப்போதும் விழிப்புடன் இருப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் இவ்வாறு உறுதிமொழிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.

நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 

தலைப்புச்செய்திகள்