Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருவள்ளூர் : பூந்தமல்லி அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வராமல் மணப்பெண் தப்பி ஓடிய நிலையில் நஷ்டஈடு வழங்க வேண்டும் என மாப்பிள்ளை வீட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தை சேர்ந்த வாலிபருக்கும், மதுராந்தகத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்க இரு வீட்டார் முடிவு செய்து, திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.
நேற்று மாலை நசரத்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணமும் நடைபெறுவதாக இருந்தது.இந்த நிலையில் மணமகன் திருமண மண்டபத்திற்கு அலங்காரத்துடன் வந்து காத்திருந்தார். ஆனால் நீண்ட நேரமாகியும் பெண் வீட்டிலிருந்து மணப்பெண்ணும் பெண் வீட்டாரும் வராததால் சந்தேகமடைந்த மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, அழகு நிலையத்திற்கு சென்ற பெண் மாயமாகி விட்டதாகவும் அவரை தேடி கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த மாப்பிள்ளையின் உறவினர்கள் திருமண மண்டபத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பேனர்களை கிழித்து எறிந்தனர். மேலும் திருமண ஏற்பாடு செய்து திருமணம் நின்று விட்டதால் பெண் வீட்டார் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என நசரத்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அலங்காரம் செய்ய சென்ற பெண் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.