Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கான விதிமுறைகள் வகுக்கப்படும்: அமித் ஷா

டிசம்பர் 21, 2020 08:23

போல்பூர்: மேற்கு வங்க மாநிலத்துக்கு இரு நாட்கள் பயணமாக கடந்த வெள்ளிக்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்திருந்தார். கடந்த இரு நாட்களாகப் பல்வேறு நிகழ்ச்சிகள், கூட்டங்களில் அமித் ஷா பங்கேற்றார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி உள்பட 7 எம்எல்ஏக்கள், ஒரு எம்.பி. ஆகியோர் பாஜகவில் அமித் ஷா முன்னிலையில் இணைந்தனர். அடுத்த ஆண்டு மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால் ஆட்சியைப் பிடிப்பதில் திரிணமூல் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இரு கட்சிகளின் தலைவர்களும் ஒருவர் மாறி ஒருவர் அனல் பறக்கும் வார்த்தைகளால் அறிக்கை விட்டு வருகின்றனர்.

கொல்கத்தாவிலிருந்து டெல்லி புறப்படும் முன் உள்துறை அமைச்சர் அமித் ஷா நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது மேற்கு வங்க தலைமைச் செயலாளருக்கும், போலீஸ் டிஜிபிக்கும் மத்திய உள்துறை நோட்டீஸ் அனுப்பியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அமித் ஷா பதில் அளிக்கையில், “அரசியலமைப்புச் சட்டத்தின்படிதான் தலைமைச் செயலாளருக்கும், காவல் டிஜிபிக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. மத்திய அரசின் கீழ் பணியாற்றும் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி ஆஜராகக் கூற உரிமை இருக்கிறது. நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தின்படி, முதலில் திரிணமூல் அரசு விதிமுறைகளைப் பின்பற்றி நடந்துவிட்டு, அதன்பின் மத்திய அரசிடமும், மக்களிடமும் பேச வேண்டும்.

பாஜக தலைவரின் பாதுகாப்பு வாகனம் தாக்கப்பட்டதை பாஜக கண்டித்துள்ளது. நானும் கண்டித்துள்ளேன். ஜனநாயகத்தில் ஒவ்வொருவரும் தங்கள் கருத்தை வெளிப்படுத்த உரிமை இருக்கிறது என பாஜக நம்புகிறது. அனைத்துக் கட்சிகளின் குரல்களையும் கேட்க வேண்டியது ஆளும் கட்சியின் பொறுப்பாகும். பாஜக தலைவர் வாகனத்தின் மீதான தாக்குதல் அவர் மீதான தாக்குதல் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். இதற்கு முழுமையாக திரிணமூல் காங்கிரஸ் பொறுப்பேற்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மேலும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மேற்கு வங்கத்தில் நடைமுறைக்கு வருவது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமித் ஷா பதில் அளிக்கையில், “நாட்டில் கரோனா வைரஸ் தடுப்பூசி போடத் தொடங்கியவுடன், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கான விதிமுறைகள் வகுக்கப்படும். கரோனா வைரஸ், பரவல் காரணமாக இதுவரை விதிமுறைகள் வகுக்கப்படவில்லை” எனத் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்