Sunday, 16th June 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: ஒரு மணி நேரத்தில் 2,000 சப்பாத்திகள் தயார் செய்து தரும் தானியங்கி சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரம் ஒன்று டெல்லி விவசாயிகளின் போராட்டக் களத்தில் நிறுவப்பட்டு உள்ளது.
மத்திய அரசு கடந்த செப்டம்பரில் 3 வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது. இந்த சட்டங்களை வாபஸ் பெறக்கோரி பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் நாட்டின் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை நடந்த பலகட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன. விவசாயிகள் போராட்டத்தால், டெல்லி எல்லைப் பகுதியில் போக்குவரத்து முடங்கியுள்ளது.
டெல்லி புராரி மைதானத்தில் திரண்டுள்ள விவசாயிகள், தாங்களாகவே உணவு தயார் செய்கின்றனர். சப்பாத்தி, சப்ஜி ஆகிய உணவுகளை மைதானத்திலேயே தயார் செய்து ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் ஒரு மணி நேரத்தில் 2,000 சப்பாத்திகள் தயார் செய்து தரும் தானியங்கி சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரம் ஒன்று போராட்டக் களத்தில் பயன்படுத்தப்பட்டு வருவது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.
சப்பாத்தி மாவை பதத்தில் பிசைவது முதல், சிறிய உருண்டைகளாக உருட்டி, அவற்றை வட்ட வடிவில் மெலிதாகத் தேய்த்து, நெருப்பில் சுட்டு, சுடச்சுட சப்பாத்தியாக தயாரிப்பது வரை இந்த ஒரே இயந்திரம் அத்தனை வேலைகளையும் செய்கிறது. இந்த இயந்திரம் மூலம் ஒரு மணி நேரத்தில் 2,000 சப்பாத்திகள் வரை தயார் செய்ய முடியும்.
இது ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான விவசாய மக்களுக்கு உணவளிக்கிறது. இதில் தயாரிக்கும் சப்பாத்திகள் அதிக சுவையாகவும் இருக்கின்றனவாம். இதுதவிர போராட்டத்தில் பங்கேற்றுள்ள பெண்களுக்கு வசதியாக 20 மொபைல் கழிப்பறைகள் நிறுவப்பட்டுள்ளது.