Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஹைதராபாத்: தெலுங்கு சினிமா படஉலகில் பிரபலமாக இருக்கும் நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சிரஞ்சீவி. இவர் ’சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தை அடுத்து அவர் தற்போது ’ஆச்சார்யா’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். பிரபல இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கி வரும் இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளார்.
சிரஞ்சீவியின் 65வது பிறந்தநாள் மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆச்சார்யா படத்தின் மோஷன் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டனர். இந்நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் நவம்பர் 9ம் தேதி மீண்டும் படப்பிடிப்பு தொடங்க இருந்தது.
இந்நிலையில் படப்பிடிப்புக்கு முன்னர் சிரஞ்சீவி உள்ளிட்ட படக்குழுவினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சிரஞ்சீவிக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் தன்னைத் தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதுகுறித்து நடிகர் சிரஞ்சீவி தெரிவிக்கையில் மேலும் தன்னை சந்தித்தவர்கள், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனா சோதனை செய்துகொள்ளும் படி கேட்டுக்கொண்டுள்ளார். இதையறிந்த சிரஞ்சீவி ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.