Monday, 3rd June 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் நான்காம் ஆண்டு ஆட்டோமொபைல் பொறியியல் துறையில் பயிலும் மாணவர்கள் . சிவக்குமார், ராஜீஷ், ஸ்ரீ மாரி நிவாஸ், விக்னேஷ், . புகழேந்தி ஆகியோர் இணைந்து துறை தலைவர் பத்மநாபன் வழிகாட்டுதலின்படி சூரிய சக்தியில் இயங்கும் காரினை தயாரித்து சாதனை புரிந்துள்ளனர். தற்போது இயங்கும் வாகனங்களில் எரிபொருள் பயன்படுத்துவதால் அதிக காற்று மாசு ஏற்படுவதை கருத்தில் கொண்டு மாணவர்கள் இந்த காரினை வடிவமைத்துள்ளனர்.
இந்த காரில் சூரிய தகட்டினை பயன்படுத்தி சூரிய ஒளி ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றப்பட்டு மின்கலத்தில் சேமிக்கப்படுகிறது. இவ்வாறு சேமிக்கப்பட்ட மின் ஆற்றல் மின் மோட்டாருக்கு கொடுக்கப்பட்டு இந்த கார் இயக்கப்படுகிறது. இந்த சூரிய ஒளி மின் ஆற்றல் பயன்படுத்துவதால் மின்கலன்களின் செரிவூட்டும் நேரம் மற்றும் கட்டணம் குறைக்கப்படுகிறது. சாதாரணமாக ஒரு முறை மின்கலத்தினை செரிவூட்டினால் இந்த கார் சராசரியாக மணிக்கு 40கி.மீ. வேகத்தில் 90கி.மீ. தூரம் பயணிக்க முடியும். ஆனால் இந்த காரில் சூரிய ஒளி மின் ஆற்றல் பயன்படுத்துவதால் சராசரியாக மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் 145கி.மீ. தூரத்திற்கும் பயணிக்க முடியும்.
கார் நிறுத்தி வைக்கும் போதும் சூரிய ஒளி மின் ஆற்றல் மூலமாக மின்கலம் செரிவூட்டப்படுகிறது. நம் வசதிக்கேற்ப இந்த காரின் நீளத்தை குறைத்துக் கொள்வதற்கும் அதிகரித்துக் கொள்வதற்குமான தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதால் கார் நிறுத்துமிடத்தின் அளவு குறைகிறது. இவ்வாறு எதிர் கால பயன்பாட்டை கருத்தில் கொண்டு மாணவர்களால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சூரிய சக்தியில் இயங்கும் காரினை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், துணை மேலாளர் , தொழில்நுட்பம் (ஓய்வு), மார்த்தாண்டவர்மன் பார்வையிட்டு மாணவர்களை பாராட்டி மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
கல்லூரியின் நிறுவனத்தலைவர் திருநாவுக்கரசு, ஆலோசகர் பேராசிரியர் கோதண்டபாணி, முதல்வர் முனைவர் பாலமுருகன், துணை முதல்வர் கலைமணி சண்முகம், கல்விப்புல தலைவர் ருக்மாங்கதன் மற்றும் பேராசிரியர்கள் சாதனை புரிந்த மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.