Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
விழுப்புரம்: அரசு பணியாளர்களை பேருந்தில் ஏற்றி வராததால் அதிகாரிகள் திட்டியதாக மனம் உடைந்து பணிமனையில் ஓட்டுனர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் மூளகுளம் பகுதியில் வசித்து வருபவர் ராமராஜன். இவர் புதுச்சேரி அரசு போக்குவரத்து பணிமனையில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். கொரோனா காலத்தில் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்க பட்ட நிலையில் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்களை ஏற்றி வர மட்டும் இயக்கப்படும் அரசு பேருந்தை, இன்று காலை அரசு பணியாளர்களை ஏற்றி கொண்டு விழுப்புரம் வந்தார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைவரையும் இறக்கி விட்டு விழுப்புரம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் அரசு பேருந்தை நிறுத்தி விட்டு அங்கேயே ஓய்வறையில் தங்கி இருந்தார், மதியம் சாப்பாடு சாப்பிட இவருடன் வந்த நடத்துனர் ஏழுமலை ஓட்டுனர் ராமராஜனை தேடிய போது பணிமனையில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்ட அனைவரும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக விழுப்புரம் தாலுகா காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் பாக்கெட்டில் இருந்த கடிதம் ஒன்றை கைப்பற்றி பார்த்த போது அதில் என் மன மாற்றத்திற்கு காரணம் இன்று பேருந்தில் வந்த பணியாளர்கள், போக்குவரத்து துறை அதிகாரிகள், தன் உடமைகளை பறித்து கொண்ட பங்காளிகள் என்றும், போக்குவரத்து துறை அதிகாரிகள் தன் மனைவியை அலைய விடாதீர்கள் என்று எழுதி இருந்தது.
மேலும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு தொலைப்பேசில் இன்று ஓட்டி வந்த ஓட்டுநர் திருபுவனை என்ற இடத்தில் அரசு பணியாளர்களை ஏற்றாமல் வந்து விட்டதாகவும் , அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
அதன் பேரில் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஓட்டுநர் ராமராஜ் திட்டியதாக கூறப்படுகிறது, அதனால் ஓட்டுநர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது அந்த கடிதத்தின் மூலம் தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.