Wednesday, 5th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜெயலலிதா வீட்டை, அரசு நினைவிடமாக்க தீபா கடும் எதிர்ப்பு

மே 25, 2020 08:56

சென்னை, மே.25: ஜெயலலிதா வீட்டை அரசு நினைவிடமாக்குவதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ்கார்டன் இல்லத்தை அரசு நினைவிடம் ஆக்குவதற்கு தமிழக அரசு அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது. அரசின் இந்த முடிவுக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பரபரப்பான ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் தீபா பேசி இருப்பதாவது:- மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான நான் அவரது மறைவுக்கு பிறகு அரசியலுக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் பல்வேறு துரோக செயல்களால் அதிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.

தமிழகத்தில் கொரோனா என்ற கொடிய நோய் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் எனது அத்தை வசித்து வந்த எங்களது பூர்வீக சொத்தான வேதா இல்லத்தை அபகரிக்கும் எண்ணத்தோடு அ.தி.மு.க. தலைவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். சட்ட அமைச்சர் சண்முகம் அளித்த பேட்டியில் ஜெயலலிதாவின் வாரிசு என்று யாராவது அடையாளம் காணப்பட்டால் அவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இந்த நேரத்தில் அவரிடம் ஒன்றை கேட்க விரும்புகிறேன். நான் உங்களை போன்று இடையில் வந்தவள் அல்ல. அவரது ரத்த உறவு. அவர் எப்படி இறந்தார் என்பதை உங்களால் தெளிவுப்படுத்த முடியுமா? எனக்கு எனது அத்தை உயிர் மீண்டும் வேண்டும். அவரை உங்களால் திருப்பி தர முடியுமா? என தீபா கூறினார்.

தலைப்புச்செய்திகள்